பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகே ராமதீர்த்த குகையில் வசித்து வந்த ரஷ்யாவைச் சேர்ந்த நினா குடினா, 40, நாடு திரும்ப உதவ வேண்டும் என்று அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நினா குடினா, தனது இரண்டு மகள்களுடன் அங்கு வசித்து வந்தார். அவரது ஆவணம் தொலைந்துவிட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்ததாக இந்து தமிழ் திசை தகவல் வெளியிட்டுள்ளது.
கர்நாடக காவல்துறையினர் அவர்களை மீட்டு கடந்த ஜூலையில் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நினா குடினாவின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்ஸ்டெயின் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “தனது மனைவி, மகள்களின் கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, என் மனைவிக்கு உரிய ஆவணங்களை வழங்கி, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம்.ஷியாம் பிரசாத் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தீர்ப்பளித்தார்.
“மத்திய வெளியுறவு அமைச்சு, ரஷ்ய அரசுடன் பேசி நினா குடினா சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற அக்டோபர் 9ஆம் தேதிக்குள் அவரும் 2 மகள்களும் ரஷ்யாவுக்கு செல்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.