கர்நாடகா: பெண்களுக்கு வழங்கப்பட்ட நூறுநாள் வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்ற வேண்டிய பெண்களுக்குப் பதில் ஆண்களே பெண்கள் போல் உடையணிந்து வேலை செய்து சம்பாதித்தது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
யாத்கிரி மாவட்டம், மல்தாரில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வேலைகளும் ஆண்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதனை மறைக்க பெண்கள் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் பணியாற்றிய ஆண்களுக்கு சேலை கட்டி, தொழிலாளர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் எடுத்து பதிவேற்றியுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் அனைத்துப் பெண்களும் புடவை முந்தானையால் தங்களது முகத்தை மூடியிருந்தது மட்டுமல்லாமல் முகம் தெரியாத வகையில் புகைப்படம் இருந்தது. இது சந்தேகத்துக்கு அடிப்படையாக மாறியது.
இதை விசாரிக்கப் போன அதிகாரிகளுக்கு உண்மை தெரிய வந்தது.
பெண்களின் பெயரில் ஆண்களே இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பயனடைந்ததும் ஏராளமானோர் இந்த வகையில் பல லட்ச ரூபாய் பயன் பெற்றுள்ளதாகவும், இந்த ஒரு சம்பவத்தில் மட்டும் சேலை கட்டிய ஆண்கள் ரூ.3 லட்சம் வரை நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மோசடியாக பணம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக ரூ.370 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.