ஜெய்ப்பூர்: தன்னிடம் பயின்ற மாணவியையே ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த அந்த 17 வயது மாணவியின் உடல் ஒரு தண்ணீர்த்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஞாயிறன்று (ஜனவரி 21) அம்மாணவியின் குடும்பத்தினர் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டனர்.
மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த அந்த ஆசிரியர், அவரது வீட்டிற்குச் சென்று, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
பின்னர் அம்மாணவியைக் கொலைசெய்த ஆசிரியர், அவரது உடலை அப்பகுதியில் இருக்கும் தண்ணீர்த்தொட்டியில் வீசிச் சென்றதாக காவல்துறை விளக்கியது.
திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அம்மாணவியின் குடும்பத்தினர், அவர் அங்கில்லாதது கண்டு திடுக்கிட்டனர். பின்னர், அந்த இளம்பெண்ணின் உடல் தண்ணீர்த்தொட்டியில் கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
குற்றவாளி தலைமறைவாகிவிட்டார். அவரைக் காவல்துறை தேடி வருகிறது.