திருவனந்தபுரம்: கேரள மாநிலம், புன்னப்பரா பகுதியைச் சேர்ந்தவர் உஷா ஜோசப், 55.
அவர் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கருப்பையில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
வந்தனம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உஷா அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், அதன்பிறகும் அவருக்கு வயிற்று வலி நீடித்தது.
இந்நிலையில், உஷா தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.
தவற்றை ஒத்துக்கொண்ட அரசு மருத்துவர்கள், கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க மீண்டும் அரசு மருத்துவமனையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உஷா முடிவு செய்துள்ளார்.
மருத்துவர்களின் கவனக்குறைவான செயல் வந்தனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உஷாவின் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

