சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளைத் திரித்துப் பேசுவது பிரதமர் மோடிக்கு கைவந்த கலையாக இருக்கிறது. அதுபோன்ற பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்றார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து வாக்குச்சேகரிக்கிறார் பிரதமர் மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
“அதன்படி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க திமுக தயாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.
“அமெரிக்காவில் வாழ்கிற சாம்பிட்ரோடா ஏற்கெனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக்கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.
“அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்திருக்கிறது. இதற்குப் பின்னரும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.