புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான தூதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
அதில் ஒன்று சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது.
சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணையின் மதகுகள் மூடப்பட்டு, பாகிஸ்தானுக்கு நீர் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
திபெத் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கூறப்படுகிறது.
இந்த நதிகள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்கின்றன.
கடந்த 1960ல் உலக வங்கியின் முன்னிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில் 30 விழுக்காடு மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது.
மீதமுள்ள 70 விழுக்காடு பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது.
இமயமலைப் பகுதியில் இமாச்சல மாநிலத்தில் உருவாகும் செனாப் நதி, ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு பாய்கிறது.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இந்த அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன.
பாதிப்பு
இதுபோல ஜீலம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிஷண்கங்கா அணையின் மதகுகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த சில நாள்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாக்லிஹார் அணையில் நீர் நிறுத்தப்பட்டால் அது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
“இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கான நீரை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும் என்பதை உணர்த்துவதாக அமையும்,” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போராக கருதப்படும்
சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கடந்த வாரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் அந்த இடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எல்லையோரங்களில் உள்ள பதுங்குக் குழிகளையும் இந்திய ராணுவத்தின் தயார் நிலையில் வைத்துள்ளனர்.