திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தென்னலா பாலகிருஷ்ண பிள்ளை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) திருவனந்தபுரம் மருத்துவமனை ஒன்றில் காலமானார்; அவருக்கு வயது 95.
பாலகிருஷ்ண பிள்ளையின் உடல், திருவனந்தபுரம் நெட்டயத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பாலகிருஷ்ண பிள்ளை, கேரள மாநில காங்கிரஸ் தலைவராக 1998ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரைக்கும் 2004ஆம் ஆண்டு முதல் 2005ஆண்டு வரைக்கும் இருமுறை பதவி வகித்தவர். 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு இருமுறை அடூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்தார்.
மேலும், மூன்று முறை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.