சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் 3 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
அந்த வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள், 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் 13 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதில் அசோக்குமார் மட்டும் தலைமறைவாக உள்ளதாக வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் கூடுதல் குற்றப்பத்திரிகையை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 9ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அசோக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் கடந்தமுறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த அசோக்குமாரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேரில் ஆஜராகினர்.
அப்போது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, குற்றப்பத்திரிகை நகலை காகித வடிவில் தர வேண்டும் எனவும், அப்போதுதான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் உறுதித்தன்மை வெளிப்படும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஜினீஷ் பாட்டியால், “இந்த குற்றப்பத்திரிகை நகல்கள் 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் இருப்பதால் அவற்றை பென்-டிரைவ் வடிவில் தருவதாகவும், புதிய சட்டத்தின் கீழ் மின்னணு முறையில் மட்டுமே ஆவணங்களை வழங்க முடியும்,” எனவும் குறிப்பிட்டார்.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அசோக்குமார் உள்ளிட்ட விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் வரும் ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் தலா ரூ.2 லட்சத்துக்கான முன்பிணை உத்தரவாதம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.