புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் செயல்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலை முடக்கிய காவல்துறை, அதனிடமிருந்து 23 பெண்களை மீட்டது.
மீட்கப்பட்டவர்களில் மூவர் சிறார் என்றும் பத்துப் பேர் நேப்பாள நாட்டினர் என்றும் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.
மேலும், ஆட்கடத்தல் தொடர்பில் எழுவர் கைதுசெய்யப்பட்டனர்.
“ரகசியத் தகவல்கள், கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் தொழில் நடக்கும் முக்கிய இடங்களைக் காவல்துறை அடையாளம் கண்டது. மேற்கு வங்கம், நேப்பாளம், வேறு பல மாநிலங்களில் அப்பெண்களை ஆசைகாட்டி தங்கள் வலையில் வீழ்த்திய கும்பல், பின்னர் அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளியது,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் விளக்கினார்.
பாகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, பின்னர் நகரிலுள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதிரடிச் சோதனைகளை நடத்துமுன், அப்பகுதிகளைக் கண்காணித்ததாகவும் போலியான வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
“பாலியல் தொழில் இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டதும் ஹோட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டோம். ஸ்கூட்டர் மூலம் அப்பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது கண்டறியப்பட்டது,” என்றும் அவர் சொன்னார்.