புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவந்த பாஜக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்து திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) தீர்ப்பளித்தது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாவார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் ஆறு பேர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின்பேரில், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட்டார். மேலும், அவர்மீது அளிக்கப்பட்ட ஒரு புகாரில் இருந்து மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
18 வயதுக்குட்பட்ட வீராங்கனை ஒருவர் மட்டும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் புகார் அளித்திருந்தார். எனினும், பின்னர் அவர் அப்புகாரைத் திரும்பப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மற்ற புகார்கள் மீது வழக்குப் பதிவாகி நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 2ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி தலைமை நீதித்துறை நடுவர் அஸ்வினி பன்வால், குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் வினோத் தோமர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து இருவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

