இந்தித் திரையுலக நட்சத்திரங்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை விவரங்களைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது.
இணையத்தில் கிடைக்கும் அந்தப் பிரபலங்களின் ஜிஎஸ்டி அடையாள எண்களைப் பயன்படுத்தி, அவர்களின் PAN விவரங்களை அந்த மோசடிக் கும்பல் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், இம்ரான் ஹாஷ்மி, மகேந்திர சிங் டோனி உள்ளிட்டோரின் பெயர்களை அக்கும்பல் பயன்படுத்தியதாக டெல்லி காவல்துறை துணை ஆணையம் ஷகத்ரா ரோகித் மீனா தெரிவித்ததாக ‘பிடிஐ’ செய்தி கூறியது.
புனே நகரைச் சேர்ந்த ‘ஒன் கார்டு’ எனும் நிதித் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலமாக அந்தப் பிரபலங்களின் பெயரில் அக்கும்பல் கடனட்டை பெற்றதாகச் சொல்லப்பட்டது.
அந்தக் கடனட்டைகளைப் பயன்படுத்தி, அக்கும்பல் ரூ.21.32 லட்சம் மதிப்பிற்குப் பொருள்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் புனீத், முகம்மது ஆசிஃப், சுனில் குமார், பங்கஜ் மிஷார், விஷ்வ பாஸ்கர் சர்மா எனும் ஐவரை டெல்லி காவல்துறை கைதுசெய்துள்ளது.
“இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதால், இதுகுறித்து மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது,” என்று திரு ஷகத்ரா சொன்னார்.