புதுடெல்லி: அரபிக் கடலின் வடபகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியது தொடர்பாக, அந்நாட்டுத் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலின் வடபகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலை நோக்கிப் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று அதிக வேகத்தில் மோதியது.
அந்தச் சம்பவத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்தது.
எனினும், அந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகப் பொறுப்பு அதிகாரி சாத் வார்ரைச்சை வெளியுறவுத்துறை அமைச்சுக்கு நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
“கடலில் பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாத, தொழில்முறையற்ற நடவடிக்கையை மேற்கொண்டதால் இந்தியக் கடற்படைப் பிரிவுடன் மோதல் ஏற்பட்டது,” என்று அவரிடம், இந்தியா கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்தது.
பாகிஸ்தானின் நடவடிக்கை, 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வுகள் குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கும் ஒப்பந்தத்தின் 10வது பிரிவுக்கு முரணானது என்று வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்தது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இரு நாட்டு ஒப்பந்த விதிகளை மதித்து, உரிய கவனத்துடன் அனைத்து ராணுவப் பிரிவுகளும் செயல்பட வேண்டியதன் அவசியத்தைப் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு அந்நாட்டுப் பொறுப்பு அதிகாரியிடம் இந்தியா அறிவுறுத்தியது.
