சித்தராமையாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

சித்தராமையாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

2 mins read
6a9eec04-5690-4433-bc5c-a62b1c6c225b
கர்நாடக முதல்வர் சித்தராமையா - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சித்தராமையாமீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கலாமா என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், முதல்வர் பதவியைவிட்டு சித்தராமையா விலக வேண்டும் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், சித்தராமையாவை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் சித்தராமையாவையும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் டெல்லிக்கு வரவழைத்து இருவரிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையாவிடம் மனைவிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு குறித்து விசாரித்தனர். இந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எவ்வாறு சமாளிப்பது? இந்த வழக்கால் கர்நாடக அரசுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவை மாற்றிவிடலாமா அல்லது அவரையே தொடர அனுமதிக்க‌லாமா என தனியாக ஆலோசித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்துக்கு பின்னர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இப்போதைக்கு அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.பாஜகவினர் திட்டமிட்டு புகார்களை கூறி வருகின்றனர். இதையெல்லாம் சட்டப்படி எதிர்கொள்வோம்,’‘ என்றார் சிவகுமார்.

குறிப்புச் சொற்கள்