புதுடெல்லி: தைவானைச் சேர்ந்த மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானின் சிங்கப்பூர் கிளை, இந்தியாவில் உள்ள தனது துணை நிறுவனத்தில் மேலும் ரூ.319 கோடி முதலீடு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம், சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஐஃபோன்களைத் தயாரித்து வருகிறது.
வியாழக்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற ஃபாக்ஸ்கான் சிங்கப்பூர் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 35.17 கோடி பங்குகளை ஒரு பங்கு ரூ.10 வீதம் சிங்கப்பூர் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்திய ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் சிங்கப்பூர் ஃபாக்ஸ்கானின் மூலதனப்பங்கு 99.9%ஆக உயர்ந்துள்ளது.
இந்த முதலீட்டைத் தொடர்ந்து, இந்தியத் துணை நிறுவனத்தில் ஃபாக்ஸ்கான் சிங்கப்பூரின் பங்குரிமை கிட்டத்தட்ட முழுமையாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் 2,318 கோடி பங்குகளைக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் இந்தியாவில் அதன் மொத்த முதலீட்டு மதிப்பு கிட்டத்தட்ட ரூ.24,200 கோடியை எட்டியுள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பின் காரணமாக ஃபாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தித் திறனை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியச் சந்தையில் ஃபாக்ஸ்கான் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

