புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி மர்லேனா அப்பொறுப்பை ஏற்றார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரபூர்வ இல்லத்தைக் காலி செய்த நிலையில், முதல்வர் அதிஷி அங்கு குடியேறினார்.
இந்நிலையில், முதல்வர் அதிஷியின் உடைமைகளை டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள், அக்டோபர் 9ஆம் தேதி அந்த இல்லத்திலிருந்து வெளியே அகற்றினர். பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் திருவாட்டி அதிஷி தமது கல்காஜி குடியிருப்பில் இருந்தபடி பணிகளை மேற்கொண்டார். அங்கு தமது உடைமைகள் வைக்கப்பட்ட பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து அரசுக் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார். இந்தப் புகைப்படத்தை ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், ‘‘டெல்லி மக்களுக்காக உழைக்கும் அதிஷியின் உறுதிப்பாட்டை பாஜகவால் பறிக்க முடியாது. முதல்வரின் இல்லத்தை பலவந்தமாக பாஜக கைப்பற்ற முயன்று வருகிறது. ஆளுநர் சக்சேனா உத்தரவின்பேரிலேயே முதல்வரின் உடைமைகள் அகற்றப்பட்டுள்ளன,” என்றும் திரு சிங் செய்தியாளர்களிடம் சொன்னார்.

