லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறை அலுவலக மேற்கூரை இடிந்ததில் உதவி ஆய்வாளர் மரணமடைந்தார்.
வீரேந்திர மிஸ்ரா எனப்படும் அவர், காசியாபாத்தின் அங்குர் விகார் என்னும் இடத்தில் உள்ள காவல்துறை துணை ஆணையரின் அலுவலகத்தில் நிர்வாகப் பணியிலிருந்தார்.
உதவி ஆய்வாளர் பதவியில் இருந்த அவர், காசியாபாத்தில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை (மே 24) பணியில் ஈடுபட்டிருந்தார்.
இரவுநேரம் அங்கேயே அவர் தங்கிவிட்டார். ஆனால், டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் காசியாபாத்திலும் தாக்கம் ஏற்பட்டது.
பலத்த காற்றும் மற்றும் மழையில் துணை ஆணையர் அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. உள்ளே தூங்கிக்கொண்டு இருந்த வீரேந்திர மிஸ்ரா மீது கட்டட இடிபாடுகள் விழுந்ததில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
அவர் மரணமடைந்தது ஞாயிற்றுக்கிழமை காலைதான் தமக்குத் தெரியும் என்று காவல்துறை துணை ஆணையர் அஜய் குமார் சிங் தெரிவித்தார்.
“மழை கடுமையாகப் பெய்தபோது காற்றும் பலமாக வீசியது. அதில் எனது அலுவலகக் கூரை இடிந்து, தூங்கிக்கொண்டு இருந்த வீரேந்திர மிஸ்ரா மீது விழுந்துவிட்டது. காலையில் தகவல் கிடைத்து விரைந்து வந்து பார்த்தோம். வீரேந்திராவின் சடலத்தைத்தான் காணமுடிந்தது,” என்றார் அஜய் குமார் சிங்.

