ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது மற்றொன்றாக ஏறி நின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் வரிசையாக வைத்தனர்.
குறைந்தது 260 பேரின் உயிர்களைப் பறித்த ஒடிசா ரயில் விபத்து, இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான ரயில் விபத்தாகும்.
இரு பயணிகள் ரயில்களும் ஒரு சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கின. ஒரு ரயில்மீது மற்றொரு ரயில் மோதிய வேகத்தில், ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன.
மற்றொரு ரயில் பெட்டி தலைக்குப்புற கிடந்தது. இதில் பயணிகள் பகுதி நசுங்கியது.
ரயில் பெட்டி இருக்கைகள், பயணிகளின் உடைமைகள், உடல்கள் சிதறிக் கிடந்தன.
இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிளந்த ரயில் பெட்டிகளுக்குள் நுழைந்து பயணிகளை மீட்க ஊழியர்கள் சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தினார்.
விபத்து நிகழ்ந்த இரவில் மரண எண்ணிக்கை 50லிருந்து 100க்குமேல் என்றும் பின்னர் 250க்குமேல் என்றும் படிப்படியாக கூடியது.
நிகழ்விடத்தில் அவசர மருத்துவ வாகனங்களின் சத்தம் ஓயவில்லை. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களை மருத்துவமனைகளில் கொண்டுசேர்க்க பேருந்துகளும் பயன்படுத்தப்பட்டன.