கோல்கத்தா: இந்தியா - பங்ளாதேஷ் எல்லைப் பகுதியில் ரூ.12 கோடி மதிப்புள்ள பாம்பு நஞ்சைக் கைப்பற்றி இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 9) எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
படிகக் குடுவைக்குள் ஊற்றி அதனைக் கடத்தி வந்ததாகக் கூறி, ஆடவர் ஒருவரை அவர்கள் கைதுசெய்தனர். பின்னர் அவர் மேற்கு வங்க மாநில வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த ஆடவர் மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தபன் அதிகாரி, 51, எனப் பின்னர் அடையாளம் காணப்பட்டது.
பாம்பு நஞ்சிருந்த சிறப்புப் படிகக் குடுவை பிரான்சில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. நேப்பாளம் வழியாகச் சீனாவிற்கு அதனைக் கடத்த முயன்றிருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு நஞ்சு சோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 14 மாதங்களில் பாம்பு நஞ்சைக் கடத்த முயன்று பிடிபட்டிருப்பது இது மூன்றாம் முறை எனத் தெரிவிக்கப்பட்டது.