புதுடெல்லி: இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, ஏறக்குறைய மூன்று வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல் எடை ஏறக்குறைய ஒன்பது கிலோ குறைந்துவிட்டது.
நீட் தேர்வு, வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி ஜூன் 20ஆம் தேதி முதல் டெல்லியில் நடத்தி வரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சோனம் வாங்சுக்.
சிறந்த கல்வியாளர், விஞ்ஞானி எனப் பன்முகம் கொண்ட திரு சோனம் வாங்சுக் மரணப்படுக்கையில் உள்ளதாகக் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவரான அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
வாங்சுக் உடலில் ரத்த சர்க்கரை அளவு, உயிர் வாயு அளவு தொடர்ந்து சீரற்ற நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை (ஜூலை 16) கழிவறைக்குச் செல்லும்போது திரு வாங்சுக் கீழே விழ நேர்ந்ததாகவும் அவர் மிகவும் தளர்ந்த நிலையில் இருப்பதாகவும் அபிஜித் தீப்கே கவலை தெரிவித்துள்ளார்.
தீப்கே பலமுறை வலியுறுத்தியும் உண்ணாவிரதத்தைக் கைவிட வாங்சுக் மறுத்துவிட்டதாகக் தெரிகிறது.
இந்நிலையில், உண்ணாவிரதத்தைத் தொடரும் பட்சத்தில் திரு வாங்சுக்கின் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜூலை 20ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது, அப்போது நாடு முழுவதும் சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல திரு வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, உடல் தளர்ந்துள்ள திரு வாங்சுக்கை ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமை சந்தித்தார்.

