லக்னோ: உணவகத்தில் மனைவியுடன் சேர்ந்து உணவருந்தியபடி, புத்தாண்டைக் கொண்டாட வெளிநாடு செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்த ஆடவரை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அஜித் மௌரியா, 41, என்ற அந்த ஆடவர், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலிக் காப்பீட்டுத் திட்டங்கள், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது போன்ற குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டார்.
ஆறாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள மௌரியா, சமூக ஊடகங்களில் குறுங்காணொளிகளை வெளியிட்டு வருபவர். அவருக்கு இரண்டு மனைவிகளும், ஒன்பது குழந்தைகளும், ஆறு காதலிகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்தனை பேருக்கான உணவு, உடை என அனைத்தையும் தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் குற்றச் செயல்களில் இறங்கியதாகக் காவல்துறையிடம் மௌரியா கூறினார்.
அவர்மீது ஒன்பது குற்ற வழக்குகள் உள்ளன. பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, தர்மேந்திர குமார் என்பவரிடம் அவர் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது. தர்மேந்திரா அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மௌரியாவைப் பிடித்தனர்.
கடந்த 2000ஆவது ஆண்டு மும்பையில் சங்கீதா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் மௌரியா. அவர்களுக்கு ஏழு குழந்தைகள்.
2010ல் வேலை போனதால், உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு மௌரியா திரும்பினார். ஆனாலும், நல்ல வேலை கிடைக்கவில்லை.
கடந்த 2016ஆம் ஆண்டில் அவர்மீது முதல் திருட்டு வழக்கு பதிவானது. அதன்பிறகு குற்றமே அவரது வழியானது.
அதற்கு ஈராண்டுகளுக்குப் பிறகு சுசீலா என்ற பெண்ணுடன் நெருக்கமான மௌரியா, 2019ஆம் ஆண்டு அவரை மணந்துகொண்டார். அவர்மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் மௌரியா.
மௌரியா வாடகை வீட்டில் வசித்தாலும், அவர் இரு மனைவிகளுக்கும் தனித்தனி வீடு கட்டிக் கொடுத்திருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும், தனது மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தை இரு மனைவிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்தார்.
மௌரியாவின் கைப்பேசி அழைப்புகளைச் சோதித்தபோது, அவருக்கு மேலும் ஆறு காதலிகள் இருப்பதைக் காவல்துறை கண்டுபிடித்தது. சமூக ஊடகத்தில் தனது செயல்பாடு மூலம் அவர் பெண்களைத் தன் வலையில் விழ வைத்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.