மும்பை: கடந்த நவம்பரில் மும்பை பல்கலைக்கழகத்தில் ஐந்தாவது அரையாண்டுப் பருவ கணிதத் தேர்வு எழுதிய மாணவர்களில் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
அவர்களுக்கு அதிகபட்ச மதிப்பெண்களைவிட அதிகமாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
சில மாணவர்களுக்கு 115 மதிப்பெண்ணும் இருவருக்கு 104 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி குறிப்பிட்டது.
பி.எஸ்சி. கணிதம் மூன்றாமாண்டு பயின்ற மாணவர்கள் 2022 நவம்பரில் எழுதிய ஐந்தாம் அரையாண்டுப் பருவத் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாயின.
முன்னதாக, தேர்வெழுதியபோதும் சில மாணவர்கள் ‘தேர்வெழுத வரவில்லை’ எனக் குறிப்பிட்டிருந்ததையும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தியாக வெளியிட்டிருந்தது.
இப்போது தேர்வு முடிவுகளிலும் தவறுகள் நிகழ்ந்துள்ள நிலையில், அவை சரிசெய்யப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது தேர்வுத்தாள் மதிப்பீட்டுத் தரம் மோசமாக இருப்பதைக் காட்டுகிறது என்று கூறி, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நொந்துகொண்டார்.