அகமதாபாத்: எந்தச் சக்தியாலும் இந்தியாவைப் பணியவைக்க முடியாது என்று குஜராத் சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டுநிறைவு விழாவில் திங்கட்கிழமை (மே 11) பேசிய இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விழா அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் உத்வேகமாகத் திகழும். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது; 1951ல் நடந்த சோமநாதர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா இந்தியாவின் சுதந்திர உணர்வை உலகிற்கு அறிவித்தது.
“இந்த ஆலயம் மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ந்து மீண்டும் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவில், பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை,” என்று மோடி குறிப்பிட்டார்.
சோமநாதர் கோவிலின் பாரம்பரியம், ஆன்மிக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு நாணயம், தபால் தலையை மோடி வெளியிட்டார்.
முன்னதாக குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்குப் பிரதமர் மோடி சென்றார். அவர், அங்கு 75வது ஆண்டு மகோத்சவத்தை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடு நடத்தினார். இதுகுறித்துப் பிரதமர் மோடி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சோமநாதரின் புனிதத் தலத்திற்கு வந்தது ஒரு தெய்வீக அனுபவத்தைத் தந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புகளின்போது, 750 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சோமநாதபுரம் கோயில் ஆறு முறை அடியோடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இந்தியாவின் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமாக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலும் உணவு அமைச்சராக இருந்த கே.எம். முன்ஷியும் மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். புதிய கோயிலுக்கு 1951ல் இந்திய முன்னாள் அதிபர் டாக்டர். இராசேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். கோயில், 1995ல் அப்போதைய இந்திய அதிபர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் பொதுமக்களின் வழிபாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

