லடாக்: இந்தியாவின் 80வது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படும் நிலையில், லடாக்கிலிருந்து கல்வியாளரும் சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக, இரண்டாவது விடுதலை இயக்கத்தைத் தொடங்குமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சுயநலமற்ற, பயமில்லாத நற்பண்புகளைக் கொண்டவர்களைத் தலைவர்களாக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த சுதந்திர தினத்தில், எனக்கு உங்களின் உதவி வேண்டும். இந்தியாவிற்கு ஓர் அமைதியான புரட்சி தேவைப்படுகிறது. 2047ஆம் ஆண்டிற்குள் மதிப்புமிக்க நாடாக மாறுவதற்குத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்,” என்று அவர் பேசியுள்ளார்.
குற்ற வழக்குகளைக் கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் நம்பகத்தன்மையை இழந்துவருகிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிப் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றும் அதில் கால்வாசி பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
நாடெங்கும் உள்ள மக்களுடன் இதுகுறித்து ஆலோசிக்க விரும்புகிறேன். மக்களுக்குச் சேவை செய்யத் தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அனைவரும் ஒன்றுசேர்ந்து இரண்டாவது விடுதலை இயக்கத்தைத் தொடங்குவோம் எனக் கூறியுள்ளார்.


