புதுடெல்லி: உலகின் மிகத் தொன்மையான அறிவியல் அமைப்புகளில் ஒன்றான லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘ராயல் சொசைட்டி’யின் (Royal Society) உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அந்த அமைப்பு 1660ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். அதன் உறுப்பினராவது ஆகச் சிறந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.
டாக்டர் சௌமியாவின் தந்தை திரு. சுவாமிநாதனும் அந்த அமைப்பின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்தான். அவர், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படுபவர்.
ராயல் சொசைட்டியின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில், அதன் உறுப்பினராகும் கௌரவத்தைப் பெற்ற இரண்டாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமை டாக்டர் சௌமியாவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு விஞ்ஞானி பேராசிரியர் ககன்தீப் காங்கிற்குப் பெருமை கிடைத்தது.
காசநோய், எச்ஐவி, கொவிட்-19 போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் டாக்டர் சௌமியா சுவாமிநாதன்.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சௌமியா சுவாமிநாதன். அவருக்கு கிடைத்துள்ள பெருமை, அனைத்துலக மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.


