கோவை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது போன்று தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் கோவை புதூர் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய தீயணைப்பு அலுவலர் மார்ட்டின், சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 19ஆம் தேதி திங்கள்கிழமை காலை பேரூர் பெரிய குளத்தில் வெள்ளத்தில் சிக்கி அவர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தினர்.
அவசர நேரத்தில் தண்ணீர் வாளியின் உதவியுடன் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீண்டு வருவது எப்படி என்பது குறித்தும் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்திக் காட்டினர். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பார்த்தனர்.
இதற்கு இடையே கோவை மண்டலத்தில் உள்ள 17 கிளை போக்குவரத்து பணி மனைகள் மூலம் இயக்கப்படும் 949 பேருந்துகளில் மழைக் காலங்களில் ஒழுகாமல் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்கும் வகையில் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கும் உத்தரவு விடப்பட்டு உள்ளது.
ஒரு வாரமாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் அனைத்து பேருந்துகளிலும் மழைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போது இயல்பைவிட 90 விழுக்காடு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பைவிட 83 விழுக்காடு அதிக மழை பதிவாகியுள்ளது.