புதுடெல்லி: இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் அங்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
டெல்லியில் ஜூலை 3 வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்திலும் பருவமழை தன் ஆட்டத்தைத் தொடங்கியது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மும்பை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக மழை பெய்து வருகிறது. அதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில், மும்பை, தானே, ராய்கட் ஆகிய பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் பால்கர் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பெரும்பாலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
அந்தேரி, குர்லா கிழக்கு, பார்வே சாலை, காந்தி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து நிலைகுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

