சபரிமலை: சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தை ஒட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானப் பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருள்களை எடுத்துச் செல்ல மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த சலுகை நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே பொருந்தும் என்றும் மாத பூஜை காலங்களில் இந்தச் சலுகை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது முதல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடியைக் கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

