இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் விமானம் வானில் பறந்து கொண்டடிருந்தபோது இரு விமானிகள் விதிமுறையைப் பின்பற்றாமல் காப்பி மற்றும் தின்பண்டங்களை விமானி அறையில் உண்ட சந்தேகத்தின்பேரில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாரத் தொடக்கத்தில் விமானிகள், விமானத்தை இயக்குவதற்கான கட்டுப்பாட்டுப் பலகைமீது காப்பிக் குவளையை மூடாமல் வைத்திருந்த படம் சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்து அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன்பின்னர் இந்திய விமானத்துறை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.
37,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் அதன் பிறகு விமானிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்பைஸ் ஜெட் கூறியது.
விமானி அறையில் உணவு உண்ணலாம், பானங்கள் குடிக்கலாம். ஆனால், அதற்குக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
காப்பி கொட்டிவிடாமல் இருக்க குவளைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். காப்பியில் இருந்து சில துளிகள் கட்டுப்பாட்டுப் பலகைமீது சிந்தினாலே விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படக்கூடும்.

