புதுடெல்லி: இலங்கை தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு 30 நாள்களுக்கான மின்னணுப் பயண அனுமதியை (ஈடிஏ-ETA) வழங்குகிறது. இந்த ஏற்பாடு திங்கட்கிழமை (மே 25) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தற்போது 30 நாள்களுக்கு இலவச வருகைப் பதிவுடன் இலங்கைக்குச் செல்ல முடியும்.
இந்நிலையில், ‘ஈடிஏ’ பெற்ற இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் ‘விசா’ இன்றி இலங்கைக்குள் நுழைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணுப் பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சார்க் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், 30 நாள்கள் செல்லுபடியாகும் இரட்டை நுழைவுச் சுற்றுலா விசா பெற 20 அமெரிக்க டாலரும் மற்றவர்கள் 50 அமெரிக்க டாலரும் செலுத்த வேண்டியிருந்தது.
மாலத்தீவுகள், செஷல்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இலங்கையுடன் சில ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. எனவே, இந்நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருகைக்கு முன்னர் ‘ஈடிஏ’ பெற வேண்டும் என இலங்கை அரசு கூறியுள்ளது. எனினும், இம்மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டண விலக்கின் மூலம் பயனடையலாம்.
தகுதியுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை வந்து சேர்ந்ததும் 30 நாள்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா வழங்கப்படும் என்றும் அது முடிவடையும் காலத்திற்குள் இருமுறை நாட்டிற்குள் வந்துபோகும் வசதியும் அனுமதிக்கப்படும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

