திண்டுக்கல்: சாலையில் கிடந்த ஐந்தே கால் பவுன் தங்க நகையைக் காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதியினர் பாராட்டு பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தக் கட்டடத் தொழிலாளிகள் சத்யா, 45, சசிகலா, 44.
இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) சமுத்திராபட்டிக்குக் கட்டட வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வழியிலிருந்த குளக்கரைப் பகுதியில் சாலையில் கேட்பாரற்று ஒரு பணப்பை கிடந்தது.
அதனை எடுத்த இருவரும் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஐந்தே கால் பவுன் தங்க நகை இருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், என்ன செய்வதென்று யோசித்தனர்.
பின்னர், நத்தம் காவல் நிலையத்தில் அந்த நகையை அவர்கள் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, நகையைப் பறிகொடுத்தவர்கள் பற்றி காவல்துறை விசாரணையில் ஈடுபட்டது.
அப்போது, திண்டுக்கல் தண்டல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார், 30, சினேகா, 23, ஆகியோர் தங்களது உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வு ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நகைகளைத் தவறவிட்டது தெரியவந்தது.
அந்தத் தம்பதியினரை வரவழைத்த காவல்துறையினர், உரிய ஆவணங்களைச் சரிபார்த்து அவர்களிடம் நகையை ஒப்படைத்தனர்.
சாலையில் கண்டெடுத்த நகையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியர்களுக்குக் காவல்துறை அதிகாரிகளும் நகையைத் திரும்பப் பெற்ற தம்பதியினரும் பாராட்டு தெரிவித்தனர்.

