தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்த வேண்டும்: அனைத்துலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு வலியுறுத்து

2 mins read
8d45b284-4184-4858-bac1-5e67ec9f20fb
‘ரெசிப்ரோகல்’ என்று குறிப்பிடப்படும் பதிலுக்குப் பதில் என்ற வரி விதிப்பை கையாளும் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என இந்த அமைப்பின் தலைவரான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறி உள்ளார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு போக்கு பல்வேறு நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிபர் டோனல்ட் டிரம்பும் அவரது அதிகாரிகளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என அனைத்துலக வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) வலியுறுத்தி உள்ளது.

‘ரெசிப்ரோகல்’ என்று குறிப்பிடப்படும் பதிலுக்குப் பதில் என்ற வரி விதிப்பை கையாளும் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என இந்த அமைப்பின் தலைவரான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறி உள்ளார்.

“இந்தியாவை தொடர்ந்து அவமானப்படுத்தும் அதிபர் டிரம்ப்புடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் புதிய வரிகளை அறிவிக்க வேண்டும். “தவறான தரவுகளைப் பயன்படுத்தி இந்தியாவை பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார் அதிபர் டிரம்ப். இதுபோன்ற சூழ்நிலை இருந்தால் இரு தரப்பிற்கு வெற்றியைத் தரும் சமநிலையான முடிவு ஏற்பட சாத்தியம் இல்லை. எனவே, இந்தியா அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருந்தும் விலக வேண்டும்,” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா வலியுறுத்தினார்.

இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல் அமெரிக்காவை தயக்கமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை தாம் சுட்டிக்காட்டியதாக அமெரிக்க அதிபர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் கூறினார்.

“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் டிரம்ப் இவ்வாறு பேசி வருகிறார். இந்த விஷயத்தில் இந்தியாவின் மவுனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா உண்மையான தரவுகளைக் கொண்டு இந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்.

“டிரம்பும் அவரது அதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் இந்தியாவை சிறுமைப்படுத்துவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

“இந்தியாவில் விவசாய பொருள்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் இதற்காக வேளாண் சந்தையை திறக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கக்கூடாது. அவ்வாறு வேளாண் சந்தையை திறந்துவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும்,” என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா மேலும் எச்சரித்துள்ளார்.

குறுகிய கால தீர்வைவிட நீண்டகால பொருளாதார மீள்தன்மையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

“இந்தியாவில் விவசாய துறையை நம்பி 70 கோடி மக்கள் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் 70 லட்சம் பேர் மட்டுமே விவசாய துறையில் உள்ளனர். ஒரு சில விவசாய பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தாலும்கூட அது ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். அதன் பிறகு அவர்கள் மேலும் மேலும் சலுகைகளை கேட்கத் தொடங்கிவிடுவார்கள்,” என்றார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

குறிப்புச் சொற்கள்