திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: மார்க்சிஸ்ட்

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: மார்க்சிஸ்ட்

1 mins read
0f449c52-e21b-4230-8280-110aa015797e
-

தர்மபுரி: பெரியாருக்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சாதிய, மத எதிர்ப்புக் கொள்கைகளில் உறுதியிழந்து விட்டன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் (படம்) விமர்சித்துள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு கட்சிகளும் பாஜக, காங்கிரசைப் போன்றே மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது எனச் சாடினார்.

"ஊழல் செய்வதிலும் இரு கட்சிகளுக்கு இடையே வேறுபாடு இல்லை. இரு கட்சிகளின் தலைமையும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளன. தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்தபோது அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடக்கவில்லை என தெரிவித்தார். அப்போது ஸ்டாலின் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்," என்றார் ராமகிருஷ்ணன்.

ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு மத்திய அமைச்சரின் தூண்டுதல்தான் காரணம் என்று குறிப்பிட்ட அவர், இந்த மரணத்திற்கு பிரதமர் வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளது அதிருப்தியளிக்கிறது என்றார். "எனவே இத்தகைய சூழலை மாற்றும் ஊழலற்ற, முறைகேடு இல்லாத மாற்று அரசியலை உருவாக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்," என்றார் ராமகிருஷ்ணன்.