மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக்கொண்ட இலங்கை அகதி

மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக்கொண்ட இலங்கை அகதி

1 mins read
524b6102-b47e-4a0a-a7a3-ee625edde17a
-

வாழ வழியில்லை என்றால் மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக்கொள் என்று அரசு அதிகாரி ஒருவர் தம்மை இழிவுபடுத்த, அவ்வாறே செய்து இலங்கை அகதி ஒருவர் உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது. திருமங்கலத்தை அடுத்த கூத்தியார் குண்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 500க்கு மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரு நாட்களுக்கு முன் அகதிகள் கணக்கெடுப்புப் பணிக்காக வருவாய்த் துறை ஆய்வாளர் அங்கு சென்றுள்ளார். அப்போது, ரவீந்திரன், 48 (படம்), என்பவரும் அவரது மகனும் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த திரு ரவீந்திரன், தம் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் தாமத மாகி விட்டதாகக் கூறி, அதற்குச் சான்றாக மருத்துவ ஆவணத்தையும் காட்டியுள்ளார். ஆனால், அதனை ஏற்காமல், அவர்களது பெயர்களை வருகைப் பதிவேட்டில் குறிப்பிட ஆய்வாளர் மறுத்துள்ளார். இதையடுத்து, "இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது?" என்று ஆய்வாள ரிடம் திரு ரவீந்திரன் கேட்க, அதற்கு, "வாழ வழியில்லை என்றால் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்" என்று கூறி ஆய்வாளர் அவரை அலட்சியப் படுத்தினாராம்.

இதனால் மனமுடைந்து போன திரு ரவீந்திரன், மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை மிதித்து தம்முயிரை மாய்த்துக் கொண்டார். இதைக் கண்டு கொதித்துப் போன அகதிகள், ஆய்வாளரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கினர். தகவலறிந்து விரைந்து வந்த போலிசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பினர்.