கிரண்பேடி: எவருக்காகவும் இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

கிரண்பேடி: எவருக்காகவும் இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

1 mins read

புதுச்சேரி: புதுச்சேரியில் அவசர ஊர்தியைத் தவிர, வேறு யாரும் சுழல் விளக்கைப் பயன்படுத்தக்கூடாது. அத்துடன், எந்த 'விஐபி'க்களுக்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது. வாகனங்களில் 'சைரன்' ஒலியும் இருக்காது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி, புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கடந்த 29-ஆம் தேதி பொறுப்பேற்றார்.

அன்றைய தினத்திலிருந்தே அவர் பிறப்பிக்கும் அதிரடி உத்தரவுகள் அனைத்தும் அரசு அதிகாரிகளை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் கதி கலங்கச் செய்து வருகிறது. அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்கள், அதிகாரிகளைச் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக அவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருக்கவேண்டும் என்றும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் நடைபாதையில் கடை வைத்துள்ள அனைவரும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றவேண்டும் எனவும் ஊழல்கள் குறித்த தகவல்களை 1031 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.