தோல்வியால் துவளவில்லை: ஃபீனிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுகிறார் விஜயகாந்த்

தோல்வியால் துவளவில்லை: ஃபீனிக்ஸ் பறவையை உதாரணம் காட்டுகிறார் விஜயகாந்த்

2 mins read

காரைக்குடி: தேர்தல் தோல்வியால் தேமுதிக துவண்டுவிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஃபீனிக்ஸ் பறவையைப் போல் தேமுதிக உயிர்த்தெழும் என்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக படுதோல்வியைச் சந்தித்தது. அக்கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், விஜய காந்தும் தாம் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் வைப்புத் தொகையை இழந்தார். இதையடுத்து மக்கள் நலக் கூட்டணி யுடனான உறவை தேமுதிக துண்டித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செய்தியாளர் களைச் சந்திப்பதை விஜயகாந்த் தவிர்ப் பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் திருமண நிகழ்வில் ஆவேசமாக உரையாற்றினார் விஜயகாந்த். தாம் செய்தியாளர்களைச் சந்திக்க ஒருபோதும் தயங்கியது இல்லை என்றார் அவர்.

"செய்தியாளர்களைப் பார்த்து நான் பயப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், நான் யாரையும் பார்த்து பயப் படவில்லை. என்னைப் பார்த்துத்தான் செய்தியாளர்கள் பயப்படுகிறார்கள். சாம்பலில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை போல தேமுதிகவும் உயிர்த்தெழுந்து வரும்," என்றார் விஜயகாந்த்.

இதையடுத்து பேசிய அவரது மனைவி பிரேமலதா, தேர்தலில் பணம் செலவழித்தவர்கள் வெற்றி பெற்றதாகச் சாடினார். "பணம் கொடுக்காத வேட்பாளர்கள் மனச்சோர்வு அடைந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். "தேமுதிகவுக்கு நிச்சயமாக நல்ல, பிரகாசமான எதிர்காலம் உண்டு. எனவே சோர்வாக உள்ள தொண்டர் களும் நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்," என்று பிரேம லதா மேலும் கூறினார். விஜயகாந்தின் ஆவேசப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.