மோடி, ஜெயா இன்று சந்திப்பு

மோடி, ஜெயா இன்று சந்திப்பு

1 mins read
6ddf23eb-de53-41dc-954c-146acc4581bc
-

இந்திய பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளார். ஈராண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜெயலலிதா டெல்லி செல்வதால் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சென்னையில் அவர் பயன்படுத்தும் டொயோட்டா ப்ராடோ காரும் ஜெயலலிதாவுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட இரு நாற்காலிகளும் ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் அதிமுகவின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெய லலிதாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க உள்ளனர். இன்று ஒருநாள் மட்டும் டெல்லியில் இருக்கும் ஜெயலலிதா அங்குள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு இரு அமைச்சர் களை வரவழைத்து சந்தித்துப் பேச உள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் வர்த்தக துணை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அந்த இருவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளை அடுத்து மூன்றாம் இடத்தை அதிமுக பிடித்துள்ளது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் சேர்த்து அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 50க்கு உயர்ந்துள்ளது. மாநிலக் கட்சி ஒன்று தேசிய அளவில் இந்த அளவுக்கு அதிக இடங்களைப் பெற்றிருப்பது இது தான் முதல் முறை. மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட இரு அவைகளின் உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் ஜெயலலிதாவின் தயவு மத்திய அரசாங்கத்துக்குப் பெரிதாகப்படுகிறது. எனவே, இன்று அவர் உயர் மரியாதையுடன் வரவேற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.