சென்னை: திருவண்ணாமலைக் கோவில் கோபுர விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். நேற்று சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குப் பல நாடுகள், பல மாநிலங்களில், பல மாவட்டங்களில் இருந்து மாதம் தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவதாகத் தெரிவித்தார். "இக்கோயில் கோபுரத்தின் உட்பகுதியில் விரிசல் ஏற்பட்டது சம்பந்தமாக அங்குள்ள அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?" என வேலு கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அக்குறிப்பிட்ட விரிசல் சீரமைக்கக் கூடியதுதான் என்றார். "இது தொடர்பாக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும்," என்றார் அமைச்சர்.
கோயில் கோபுர விரிசலைச் சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
1 mins read

