புதுடெல்லி: பீகாரில் இந்த ஆண்டு வழக்கமான அளவிற்கும் குறைவாகவே மழை பெய்துள்ள போதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம் என்று கூறுகிறார் சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஹிமான்ஷு தாக்கூர். மத்தியப் பிரதேசத்தின் பன் சாகர் அணையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 95.22 விழுக்காடு தண்ணீர் சேமிக்கப் பட்டு வந்துள்ளது. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. பன்சாகர் அணையில் இனி மேல் குறைவான தண்ணீரே சேமிக்கமுடியும் என்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி மொத்தமாக நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், பருவமழை காரணமாக வட மாநிலங்களின் கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியது.
எனவே, அணையில் உள்ள 18 மதகுகளில் 16 மதகுகளில் இருந்தும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. எனவே மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், பீகார் ஆகிய மாநிலங்களைக் கடும் வெள்ளம் சூழ்ந்தது. "அணையில் இருந்து ஒரே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடாமல் இருந் திருந்தால் இந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. "இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம்," என்று கூறி உள்ளார் ஹிமான்ஷு தாக்கூர். மேலும் கங்கையில் பரக்கா தடுப்பணை கட்டியபோது சரி யாக தூர்வாரப்படாதது கங்கையில் அதிகப்படியான வெள்ளப் பெருக்கிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
பீகாரில் மட்டும் இதுவரை குறைந்தது 22 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக பீகாரில் நிலைமை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த செவ்வாய் கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்து நிலைமையைச் சமாளிக்க உதவி கோரினார். மேலும் கங்கை நதியைத் தூர் வாரி இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

