கடலூர்: தம் மீதான தேர்தல் வழக்கைச் சட்டப்படி சந்திக்க தயார் என நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீதியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவானது.
இதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. அழகிரி உள்ளிட்டோர் மீது தனித்தனி வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
"2011ல் நடந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அப்போது போலிசார் அறிவித்த இடத்தை விட்டு வேறு இடத்தில் பிரசாரம் செய்ததாக என் மீது வழக்குப் போட்டுள்ளனர். நான் அப்படிச் செய்யவில்லை. ஆக இது பொய் வழக்கு. இதைச் சட்டப்படி சந்திப்பேன்,'' என்று செய்தியாளர்களிடம் பின்னர் நெப்போலியன் கூறினார்.

