வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மீது சக கைதி நடத்திய கொடூரத் தாக்குதல் காரணமாக வேலூர் மத்திய சிறையில் பரபரப்பு நிலவியது. நேற்று காலை ராஜேஷ் கண்ணா என்ற ஆயுள் தண் டனைக் கைதி திடீரென பேரறி வாளனை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியதாகக் கூறப் படுகிறது. தாக்குதலைத் தடுக்க முயன்றபோது பேரறிவாளனின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரி கள் அவரை உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு காயமடைந்த கையில் ஆறு தையல்கள் போடப்பட்டன. பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மீதான தாக்குதல் குறித்து தகவலறிந்த அவரது தாயார் அற்புதம்மாள் உடனடியாக சிறைச் சாலைக்கு விரைந்தார்.
அங்கு பேரறிவாளனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிந்தவர், பின்னர் சிறை அதிகாரிகளிடம் தமது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கிடையே, பேரறிவாளன் மீதான தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இத்தகைய பரபரப்பான சூழ் நிலையில் சிறையில் வைத்து பேரறிவாளனைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

