பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெடித்ததால் பெங்களூருவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப, இணைய வர்த்தக நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்', 'இன்போசிஸ்', 'விப்ரோ' ஆகியவற்றின் பெங்களூரு கிளைகளில் மட்டும் மொத்தம் 70,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேற்கண்ட 3 நிறுவனங்களும் நேற்று விடுமுறை அறிவித்தன. கர்நாடகா வன்முறை காரணமாக தொழில்துறைக்கு ரூ.22,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் வர்த்தக கூட்டமைப்பான 'அசோசெம்' மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும், பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டன சில நிறுவனங்கள். விப்ரோ நிறுவனம் நேற்றைய விடுமுறைக்குப் பதிலாக 17ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதுபோல் நாட்டின் முக்கிய இணைய வர்த்தக நிறுவனங்களான 'பிளிப்கார்ட்', 'அமேசான்' இந்தியா ஆகியவையும் நேற்று விடுமுறை அறிவித்தன. வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தது நிறுத்தப்பட்டு மாநிலத்தில் அமைதி திரும்பியதும் அப்பணிகள் மீண்டும் தொடரப்படும் என்று அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி பணி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

