பெங்களூரு: கர்நாடக மாநிலத்துக்கும் கோவா மாநிலத்துக்கும் இடையே பாயும் மகதாயி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையேயும் பிரச்சினை நீடிக்கிறது. மகதாயி நதியில் கால்வாய் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் கோவா மாநிலத்தைக் கண்டித்து வட கர்நாடக மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கோவாவிலும் கர்நாடகாவைக் கண்டித்துப் போராட்டங்கள் வலுத்துள்ளன. கோவா மாநிலத்தில் டிஸ்க் உகோவா பகுதி யில் வசித்த 5 கன்னடக் குடும்பத்தினரை மர்மக் கும்பல் தாக்கியது. மேலும் 5 கன்னடக் குடும்பங்களின் வீடுகள் தாக்கப்பட்டு 3 இரு சக்கர வாகனங்களும், 3 கார்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. கோவா காவல்துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தாக்குதலுக்குக் கர்நாடக அரசியல் கட்சியினரும் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கன்னட அமைப்பினரின் எதிர்ப்பினால் கோவாவில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அம்மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. இதேபோல கர்நாடகாவில் இருந்து கோவாவுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. பெல்காமில் விவசாய அமைப்பினரின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் துணை ராணுவப் படையினர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

