சென்னை: இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அடிப்படைத் தேவைகளுக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, ஏழை, எளிய மக்களாக வாழ்ந்து வரும் பெரும்பாலான மீனவர்களை இன்னல்களுக்கு ஆட்படுத்துவது முற்றிலும் மனிதாபிமானத்திற்கு எதிரான கொடுஞ்செயல் என கூறியுள்ளார்.
"தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வர உள்ளது. ஊரெங்கும் பொங்கல் திருநாள் நடைபெற உள்ள இந்த வேளையில், மீனவர் குடும்பங்களின் தலைவனும் பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்க வேண்டுமா?" என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 51 பேரை அந்நாட்டு அரசு விடுதலைச் செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது.