1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: ப.சிதம்பரம் கணிப்பு

1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: ப.சிதம்பரம் கணிப்பு

1 mins read

சென்னை: ரூபாய் நோட்டுகள் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்கிறார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். "பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய 2015=- 16ஆம் நிதியாண்டில் 7.6 விழுக்காடாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 7.1 விழுக்காடாகக் குறையும் என்று தலைமை புள்ளியியல் அதிகாரி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

"அதே சமயத்தில், வேளாண்துறை, மீன் பிடிப்புத் துறை, வனத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி 1.2 விழுக்காட்டில் இருந்து 4.1 விழுக்காடாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சுரங்கத் துறையின் வளர்ச்சி 1.8 விழுக்காடு குறையும் எனவும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.3 என்பதில் இருந்து 7.4 விழுக்காடாகக் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது," என சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் சுரங்கம் மற்றும் கட்டுமானத் துறை கள் மந்தமான நிலையில் காணப்படும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளதைச் சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார்.