புதுடெல்லி: இந்தியாவின் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் திட்டங்கள் வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலானவை என ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு மையத்திடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. எம்டிசிஆர் எனப்படும் ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு மைய பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான கூடுதல் செயலாளர் தஸ்னிம் அஸ்லாம், இந்தியாவின் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ஏவுகணை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியன தெற்காசிய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்டவை அல்ல எனக் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் பாகிஸ்தான், அனைத்துலக அணுவாயுதப் பரவல் தடுப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
எம்டிசிஆர் என்பது ஏவுகணைத் தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் வகையில் வழிகாட்டுதல்களை வழங்கி வரும் அமைப்பாகும். 35 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் இந்தியா, அண்மையில் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.