பஞ்சாப்பில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 4 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அந்தப் போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுடன் ஏகே-47 துப்பாக்கியும் 115 தோட்டாக்களும் இத்தாலியில் தயார் செய்யப்பட்ட கைத் துப்பாக்கிகள் சிலவும் அவற்றுக்கான 400 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. ஜலந்தர் என்னுமிடத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3,440 யூரோ பணமும் 20 லட்ச ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டன. இந்தர்ஜித் சிங் என்ற அந்த காவல்துறை ஆய்வாளரை நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு போலிஸ் படை பக்வாராவில் கைது செய்தது. அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசாங்க வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அண்மையில் ஜலந்தர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறை ஆய்வாளர் இந்தர்ஜித் சிங் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இந்தர்ஜித் சிங் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளார். பின்னர் அவர்கள் மீதான வழக்கை வலுவிழக்கச் செய்து குற்றவாளிகள் விடுதலை பெற வழிவகுப்பார் என சிறப்பு போலிஸ் படையின் தலைவர் சித்து கூறினார். டார்ன் டாரன் என்னுமிடத்திற்கு இந்தர்ஜித் சிங் மாற்றப்பட்ட 14 மாதங்களுக்குள் 19 கிலோ கிராம் போதைப் பொருட்களுடன் சிக்கிய கடத்தல் பேர்வழிகள் தண்டனை பெறாமல் வெளியில் வருவதற்கு உதவியுள்ளார். கைது செய்யப்பட்ட இந்தர்ஜித் சிங் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு பின்னர் ஜூன் 19ஆம் தேதி வரை காவலில் வைக்கப்படுவார். பஞ்சாப்பில் அமரிந்தர் சிங் இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றபின் தேர்தல் வாக்குறுதியின்படி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய கைது நடவடிக்கை இது என்று பஞ்சாப் நாளேடுகள் கூறுகின்றன.

