அதிமுக இரண்டாகப் பிளவுபட்டபோது சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு ஓடிப்போகாமல் இருப்பதற்கு கூவத்தூர் விடுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டதை அம்பலப்படுத்தும் விதத்தில் காணொளி ஒன்றை 'டைம்ஸ் நவ்' தொலைக் காட்சி வெளியிட்டது. மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியால் தமிழக அரசியலில் புதிய புயல் அடிக்கத் தொடங்கியுள்ளது. கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும்போது அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தவர்தான் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன்.
சொந்த ஊரில் இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர்களை விமான நிலையத்தில் சசிகலா அணியினர் மடக்கியதாகவும், அங்கு அவர்களை பேருந்துகளில் ஏற்றியபோது அவர்களுக்குத் தலா ரூ.2 கோடி எனப் பேரம் பேசியதாகவும் பின்னர் எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து ஆளுநரை சந்திக்கச் சென்ற போது பேரம் ரூ.4 கோடி ஆனது என்றும் கூவத்தூர் போய்ச் சேர்ந்தபோது எம்எல்ஏக்களுக்குத் தலா ரூ.6 கோடி தர முன்வந்ததாகவும் சரவணன் கூறுவது போன்று அந்தக் காட்சிகள் இருந்தன. அதிமுகவை ஆதரிக்கும் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தலா ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் மற்றவர்களுக்கு அந்த அளவுக்குப் பணம் வரவில்லை என்றும் அவர் கூறுவது போன்ற காட்சியும் காணொளியில் இடம் பெற்று இருந்தது.
இதேபோன்று சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்ததாக கூறியும் காணொளி காட்சி ஒளிபரப்பானது. இது குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். திமுக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதனை வன்மையாகக் கண்டித்துள்ளன. அத்துடன் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி யுள்ளன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளி போலியானது என்று கூறியுள்ளார்.

