சசிகலாவையும் டிடிவி தினக ரனையும் ஒரேயடியாக நீக்கி வைப்பதற்கான தீர்மானத்தை அதிமுக இன்று நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுச் செயலாளர் பொறுப் பில் இருந்து சசிகலாவை நீக்கு வதற்கான அறிவிப்பு இந்தக் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தமது ஆதரவாளர்கள் யாரும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தின கரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அந்தக் கட்சியி னரிடையே உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.
முன்னதாக, இந்தப் பொதுக் குழு கூட்டம் சட்டவிரோதமானது என்றும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான பி.வெற்றி வேல் தொடுத்திருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்றுக் காலை தள்ளுபடி செய் தது. மேலும், இந்த வழக்கைத் தொடர்வதற்குத் தேவையான நடைமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீண டித்த காரணத்திற்காக வெற்றி வேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன். பொதுக்குழுவைக் கூட்ட தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பது தினகரன் தரப் புக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சசிகலாவை ஓரங்கட்டி அதிமு கவை முழுமையாகக் கைப்பற்ற முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக் கும் இது சரியான நேரம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி உள்ளனர். அதன் பின்னர் ஒட்டுமொத்த ஆட்சியும் கட்சியும் இந்த இரு வரின் கைகளுக்கு வந்து சேரும் என்றும் இரட்டை இலைச் சின் னத்தைப் பெற எளிதான வாய்ப் பை அது ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் களில் ஒரு சிலர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேற்று சந்திக்கச் சென்றிருந்ததாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவித் தது. சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு வது குறிப்பிடத்தக்கது.

