ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஆதார் எண்ணுடன் நில ஆவணங்களை இணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பினாமி நிலச் சொந்தக்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மார்ச் 11ஆம் தேதியிலிருந்து அனைத்து விவசாயிகளுக்கும் 'பட்டாதார்' எனப்படும் நில உரிமையாளர் புத்தகம் வழங்கப்படவுள்ளது. நாட்டில் முதன்முறையாக இத்திட்டம் தெலுங்கானாவில் செயல்படுத்தப்படுகிறது.
"மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களை அடையாளம் பார்த்து வரைமுறைப்படுத்தும் பணி நடக்கிறது. நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் விவ சாயிகளுக்கு 'நில உரிமையாளர்' புத்தகம் வழங்கப்படும். "இந்த முறையால் அரசு மானியங்கள் பெறும் விவசாயிகள் பயனடைவர்," என்று கூறிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "ரெங்காரெட்டி மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்களுடைய நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. அவர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்," என்றார். அப்படி இணைக்காவிட்டால் அந்த நிலங்கள் பினாமி சொத்தாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் எச்சரித்தார்.

