மலேசிய பிரதமருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

மலேசிய பிரதமருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

2 mins read
93856a66-14fe-4efa-b713-36200eae2984
-

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை நேற்று சந்தித்துப் பேசினார். உலகத் தாய்மொழி நாளையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட விழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் மலேசியா சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த விழா நடந்து முடிந்த நிலையில் நேற்று திரு நஜிப்பை அவர் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "மலேசிய பிரதமருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. திரு நஜிப்பின் சிறந்த நிர்வாகம் காரணமாக மலேசியா முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மலேசியாவின் வளர்ச்சிக்காக தமிழர்கள் பெரும்பங்காற்றி வருவது பெருமைக்குரியது,' எனத் தெரிவித்தார்.

சந்திப்பின்போது திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் திரு நஜிப் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாக அவர் சொன்னார். அப்போது அடுத்த பொதுத் தேர்தலில் திரு நஜிப் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தாம் வாழ்த்துத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக, உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின், "இரு நூற்றாண்டுகளாகத் தமிழ்மொழியையும் கலை, கலாசாரத்தையும் கட்டிக்காத்து, தமிழுணர்வுடன் மலேசியத் தமிழர்கள் வாழ்ந்து வருவதைக் கண்டு உங்களில் ஒருவனாக இருந்து பெருமையும் பெருமிதமும் கொள்கிறேன்," என்றார்.

பேரறிஞர் அண்ணாவும் 'மக்கள் திலகம்' எம்ஜிஆரும் மலேசியாவுக்கு வந்து சென்ற பின்னரே முதல்வரானார்கள் என்பதையும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக வந்து விட்டுச் சென்ற கருணாநிதி மீண்டும் 2வது முறையாக முதல்வரானார் என்பதையும் நிகழ்ச்சியில் பேசிய சிலர் சொன்னதை அவர் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இப்போது முதல்வராகும் ஆசையில் புதிதாய்ச் சிலர் அரசியலில் நுழைந்திருக்கிறார்கள் என்று நடிகர்கள் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் மறைமுகமாகச் சாடிய அவர், "மலேசியாவிற்கு வந்துவிட்டுப் போனால் முதல்வராகும் வாய்ப்பு கிட்டலாம் என்று கருதி பலரும் இங்கு படையெடுக்கப் போகிறார்கள்," என்றும் வேடிக்கையாகச் சொன்னார்.

தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடினும் மொழி, கலை, கலாசாரம், இலக்கியம் காக்க மலேசியத் தமிழர்களுக்கு என்றென்றும் திமுக துணைநிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.